10/5/09

அபுதாபியில் அழகுற நடைபெற்ற வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ஓட்டுரிமை பற்றிய கருத்தரங்கு.

0 கருத்துகள்

EIFF என்றழைக்கப்படும் ''அமீரக இந்தியா சகோதரத்துவப் பேரவை'' (Emirates India Fraternity Forum) வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல கட்டங்களாக பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது.

அதன் முதல் கட்டமாக அமீரகம் முழுவதும் EIFF பல கருத்தரங்குகளை நடத்தி வருகிறது.அதன் அடிப்படையில் கடந்த 09.05.2009 சனிக்கிழமை அன்று இரவு 8 மணியளவில் அபுதாபி ஏர்லைன்ஸ் ஹோட்டலில் (Behind Green House Building) இந்தக் கருத்தரங்கு துவங்கியது.

துவக்கமாக சகோதரர் ரோஸ்லான் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அத்தோடு EIFF இன் பலதரப்பட்ட சமூகப் பணிகள் குறித்து அறிமுகவுரை நிகழ்த்தினார்.அடுத்ததாக கருத்தரங்கின் மையக் கருத்தைக் குறித்து சகோதரர் செய்யது அலீ அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார். ஏன் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து அவர் பல புள்ளிவிவரங்களைக் கூறி அழகுற விளக்கினார். மொத்த வெளிநாடுவாழ் இந்தியர்களான சுமார் 2 கோடி பேர்களில் வளைகுடாவில் மட்டும் சுமார் 40 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2008 ஆம் வருட ரிசர்வ் வங்கியின் அறிக்கைப் படி வளைகுடாவிலிருந்து மட்டும் சுமார் 2,46,000 கோடி அந்நியச் செலாவணியாக இந்திய அரசுக்கு கிடைத்திருக்கிறது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் GDP இல் 5 சதவீதமாகும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த NRI களுக்கு ஓட்டுரிமை இல்லை என்பது விந்தையாக உள்ளது என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார். அடுத்ததாக EIFF இன் கேரள சகோதரர் ரஹீம் மாஸ்டர் அவர்கள் உரையாற்றினார். இங்குள்ள NRI களின் மக்கள்தொகையை கணக்கில் கொண்டால் இவர்களால் 5 எம்பிக்களையும், 35 MLA களையும் தேர்ந்தெடுக்க முடியும் என்று குறிப்பிட்ட அவர், பல்வேறு புள்ளிவிவரங்களை குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட அய்மான் அமைப்பைச் சார்ந்த சகோதரர் ஷாகுல் ஹமீது அவர்களும், INJAZAT நிறுவனத்தின் Capability Manager சகோதரர் ஜாபர் சாதிக் அவர்களும் அடுத்தடுத்து உரையாற்றினார்கள். EIFF நடத்தும் இந்த ஓட்டுரிமை போராட்டம் காலத்தின் தேவை என்றும், வெற்றி கிட்டும் வரை EIFF இந்தப் போராட்டத்தை தொடர வேண்டும் என்றும், அதற்கு தங்கள் முழு ஒத்துழைப்பும், ஆதரவும் என்றும் உண்டு என்றும் அவர்கள் தங்கள் உரையில் குறிப்பிட்டனர்.அதன் பின்னர் கலந்துகொண்டோரின் கருத்துகள் கேட்கப்பட்டன. ஆர்வமாக முன் வந்து சகோதரர்கள் கௌஸ் பாஷா, அஜ்மல், சுபைர் போன்றோர் தங்கள் கருத்துகளை முன் வைத்தனர்.சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியாக சகோதரர் அப்துல் கனி அவர்கள் முடிவுரை ஆற்றினார். EIFF இந்தப் போராட்டத்தை மூன்று கட்டங்களாக நடத்தவுள்ளது. முதல் கட்டமாக அனைத்து வளைகுடா நாடுகளிலும் இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடை பெற்று வருகிறது.இரண்டாம் கட்டமாக, இந்தியாவில் புதிய அரசு அமைந்தவுடன், பெங்களூர், கொல்கத்தா, மும்பை, கோழிக்கோடு போன்ற நகரங்களில் இது குறித்து மாபெரும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.நமது கோரிக்கைகளை அரசு கேட்காவிட்டால் மூன்றாம் கட்டமாக உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களைக் கொண்ட ஒரு சட்டக் குழு உருவாக்கப்படும். இந்தக் குழு சட்ட ரீதியாக NRI களுக்கு ஓட்டுரிமை வழங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடும். இவ்வாறு குறிப்பிட்ட அவர், இன்ஷா அல்லாஹ் EIFF இறுதி வெற்றி கிடைக்கும் வரை போராடும் என்று குறிப்பிட்டார்.கலந்து கொண்டோரிடம் Feed Back படிவங்கள் கொடுக்கப்பட்டு கருத்துகள் எழுதி வாங்கப்பட்டன.இறுதியாக சகோதரர் தஸ்தகீர் அவர்கள் நன்றியுரை நவில நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.