26/8/09

ஸ்வைன் ப்ளூ எதிரொலி ஹஜ் பயணிகளுக்கு மருத்துவ சான்றிதழ் கட்டாயம் - சவூதி அரசு உத்தரவு

0 கருத்துகள்
பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுக்க ஹஜ் யாத்திரையாக வரும் இந்திய யாத்ரீகர்கள் கட்டாயம் மருத்துவ சான்றிதழுடன் வர வேண்டும், தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என சவூதி அரேபிய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான உத்தரவை சவூதி சுகாதார அமைச்சகம் பிறப்பித்துள்ளது.
மேலும், தத்தமது நாட்டிலேயே பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கும் சான்றிதழ்களையும் யாத்ரீகர்கள் கொண்டு வர வேண்டும் எனவும் சவூதி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதவிர பன்றிக் காய்ச்சல் அதிக அளவில் பாதிக்கும் 12 வயதுக்குட்பட்டோரையும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களையும் அனுமதிப்பதில்லை என்றும் சவூதி சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
இந்த தடை காரணமாக இந்திய ஹஜ் கமிட்டி பல்வேறு நடவடிக்கைளில் இறங்கியுள்ளது.
அதன்படி காய்ச்சல், சளி போன்ற பிரச்சினைகள் உடையோரை ஹஜ் யாத்திரைக்கு அனுப்பாமல் தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பான விரிவான நடவடிக்கைகளுக்காக மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகளுடன், ஹஜ் கமிட்டி உறுப்பினர்கள் வருகிற 29ம் தேதி விவாதிக்கவுள்ளனர்.
இந்தியாவிலிருந்து யாத்திரை செல்ல விரும்புவோருக்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மூலம் மருத்துவ சான்றிதழ் அளிக்கவும், தடுப்பு மருந்து கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது பன்றிக் காய்ச்சலுக்கென பிரத்யேகமான தடுப்பு மருந்து எதுவும் இல்லை. டாமிப்ளூ மாத்திரை மட்டுமே உள்ளது. அதையே தடுப்பு மருந்தாக கொடுக்கப் போகிறார்களா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு தெரிவிக்கவி்ல்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.