17/7/09

நதாலியா எஸ்டிமிரோவா கொலை: ஒடுங்கியது செச்சனிய மக்களின் குரல்

0 கருத்துகள்
குரோஸ்னி: ரஷ்யாவும் அதன் பொம்மை செச்சனிய அரசும் செச்சனிய மக்களின் மீது நடத்திவரும் மனிதத்தன்மைக்கு எதிரான குற்ற‌ங்களை வெளி உலகத்திற்கு செய்திகளாக தந்தவர்கள் இரண்டு பெண்கள். அவர்கள் அன்னா பொலிட்கோவ்ஸ்கயாவும் ,நதாலியா எஸ்டிமிரோவாவும் ஆவர் . இந்த இரண்டு பெண்களையும் கொலைச்செய்து செச்சனிய மக்களின் உரிமைக்குரலை முடிவுக்கொண்டுவந்தனர் ரஷ்ய ஆட்சியாளர்கள் .
செச்சனிய மக்களின் உரிமைக்கான சப்தத்தை கூட வெளி உலகம் அறியக்கூடாது என்ற தீர்மானத்தின் ஒருபகுதிதான் இரண்டு பேர்களின் கொலைகள் என்று மனித உரிமை ஆர்வலர்கள் ஒட்டுமொத்தமாக தெரிவிக்கின்றனர்.
ரஷ்யாவிலிலுள்ள சராற்றோவில் ரஷ்ய செச்னிய தம்பதிகளின் மகளாக 1969 இல் பிறந்தார் நதாலியா. குரோஸ்னி பல்கலைகழகத்தில் வரலாற்றில் பட்டம் பெற்ற நதாலியா 1998 வரை ஒரு பள்ளிகூடத்தில் வரலாற்று ஆசிரியராக பணியாற்றினார். 1999 இல் இரண்டாம் செச்னிய போர் ஆரம்பித்த சூழலில் முழுநேர மனித உரிமை பணியாளராக மாறினார் நதாலியா. ரஷ்ய அரசும் அதன் ஆதரவு செச்னிய கைக்கூலிகளும் செய்த கொடூரங்கள்தான் அவரை முழு நேர மனித உரிமை போராளியாக மாற்றியது.
2000 இல் ரஷ்யாவின் மெமோரியல் என்ற மனித உரிமை அமைப்பின் ஊழியராக பொறுப்பேற்று தற்காலிகமாக இங்குஷேஷியாவிற்கு வசிப்பிடத்தை மாற்றினார் நதாலியா. 2000 மார்ச்சில் நோரவா அற்றாகி கிராமத்திலும், 2004 இல் ரிகாக கிராமத்திலும் ரஷ்ய ராணுவம் நடத்திய நரவேட்டையைப்பற்றி விரிவான ஆய்வை நடத்தி செய்திகளை வெளி உலகத்திற்கு தெரிவித்ததன் மூலம் ரஷ்ய அரசால் கண்காணிக்கப்படும் முக்கியப்புள்ளியாக மாறினார் நதாலியா. 2006 இல் கொல்லப்பட்ட அன்னா பொலிட்கோவ்ஸ்கயாவின் உற்றத்தோழியாக இருந்த நதாலியா அவரின் மரணத்தைத்தொடர்ந்து செச்சனிய பிரச்சனையில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
2005 ஜனவரியில் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் ரோபர்ட் ஷூமான் பதக்கமும், 2007 இல் அன்னா பொலிட்கோவ்ஸ்கயாவின் பெயரில் ஏற்படுத்தப்பட்ட விருதும் நதாலியாவுக்கு வழங்கப்பட்டது. அன்னா பொலிட்கோவ்ஸ்கயாவின் மரணத்தைத்தொடர்ந்து பத்திரிகையாளர்கள் நதாலியாவிடம் "உங்களுக்கு மரண பயம் வரவில்லையா?" என்று கேட்டதற்கு அவருடைய பதில் இதுவாகயிருந்தது "அதனைவிட வலுவான மன உணர்ச்சிகள் எனக்கிருப்பாதால் மரணத்தைப்பற்றிய பயம் எனக்கு பிரச்சனையேயில்லை." என்று .

செய்தி ஆதாரம்:தேஜஸ் மலையாள நாளிதழ்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.