25/8/09

மைக்கேல் ஜாக்சன் மரணத்திற்கு மருந்தே காரணம்-தடயவியல் நிபுணர் அறிக்கை

0 கருத்துகள்
ஹூஸ்டன்: பாப் மேதை மைக்கேல் ஜாக்சன் மறைவுக்கு, அவருக்கு அபாயகரமான மயக்க மருந்தான புரோபபால், மிக அதிக அளவில் கொடுக்கப்பட்டதே காரணம் என்று லாஸ் ஏஞ்சலெஸ் தலைமை மருத்துவ தடயவியல் நிபுணர் டாக்டர் லட்சுமணன் சத்யவாகீஸ்வரன் அறிக்கை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஜாக்சன் மரண வழக்கை கொலை வழக்காக லாஸ் ஏஞ்சலெஸ் போலீஸார் மாற்றவுள்ளனர்.
ஜாக்சன் உடலில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ தடயவியல் சோதனை முடிவுகள் இதுவரை வெளியிடப்படாமல் இருந்தது. இதனால் ஜாக்சன் மரணத்திற்கு என்ன காரணம் என்றும் தெரியாமல் இருந்தது.
ஆனால் ஜாக்சனின் டாக்டர் கான்ராட் முர்ரே கடைசி கொடுத்த அபாயகரமான மயக்க மருந்தான புரோபபால்தான் ஜாக்சன் உயிரைக் குடித்ததாக சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து முர்ரே வீடு, அலுவலகங்களில் சோதனைகள் நடைபெற்றன. தீவிர விசாரணையும் நடந்து வருகிறது. இதில் முர்ரேவுக்கு எதிரான ஆதாரங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து முர்ரே எந்த நேரத்திலும் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த நிலையில் வெளியிடப்படாமல் இருந்து வந்த மருத்துவ தடயவியல் அறிக்கையை லாஸ் ஏஞ்சலெஸ், தலைமை மருத்துவ தடவியல் நிபுணர் டாக்டர் லட்சுமணன் சத்யவாகீஸ்ரவன் ஹூஸ்டன் கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளார்.
இதையடுத்து ஜாக்சனின் டாக்டர் கான்ராட் முர்ரேவுக்கு எதிராக கலிபோர்னியா கோர்ட் தேடுதல் வாரண்ட்டை பிறப்பித்துள்ளது.
அந்த வாரண்ட் உத்தரவில், லாஸ் ஏஞ்சலெஸ் தலைமை மருத்துவ தடயவியல் அதிகாரி டாக்டர் சத்யவாகீஸ்வரன் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், மைக்கேல் ஜாக்சனின் மரணத்திற்கு அதிக அளவிலான, அபாயகரமான புரோபபால் மருந்து கொடுக்கப்பட்டதே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜாக்சன் மரண வழக்கு கொலை வழக்காக மாறுகிறது. டாக்டர் கான்ராட் முர்ரே கைது செய்யப்படவுள்ளார்.
சென்னை டாக்டர் ..!
ஜாக்சன் உடலில் மருத்துவ தடயவியல் சோதனைகளைச் செய்த டாக்டர் லட்சுமணன் சத்யவாகீஸ்வரன் சென்னையைச் சேர்ந்த தமிழர் ஆவார்.
கடந்த 1992ம் ஆண்டு அவர் லாஸ் ஏஞ்சலெஸ் தலைமை மருத்துவ தடயவியல் அதிகாரியாக பொறுப்பேற்றார். அதற்கு முன்பு துணை மருத்துவ தடயவியல் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
புகழ் பெற்ற ஓ.ஜே. சிம்ப்சன் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்கு இவர்தான் மருத்துவப் பிரேதப் பரிசோதனை அதிகாரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 26ம் தேதி மைக்கேல் ஜாக்சன் உடலை பிரேதப் பரிசோதனை செய்தார் டாக்டர் சத்யவாகீஸ்வரன்.
சென்னை பல்கலைக்கழகத்தில் படித்த டாக்டர் வாகீஸ்வரன், 1971ம் ஆண்டு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் டாக்டர் படிப்பை முடித்தார். பின்னர் ஒரு வருட பயிற்சியை முடித்த அவர் 1972ம் ஆண்டு அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தார்.
ப்ரூக்ளின் யூத மருத்துவமனையில் ஓராண்டு நேரடி மருத்துவப் பயிற்சிப் படிப்பில் சேர்ந்த அவர் 1973ம் ஆண்டு அதை முடித்தார். பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் செயின்ட் லூக் மருத்துவமனையில் முழு ஆண்டு உடற்கூறியல் மற்றும் மருத்துவ நோயியல் பிரிவில் சேர்ந்து படித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.