7/7/09

உய்கூர் இனத்தவர் போராட்டத்தை முரட்டுத்தனமாக அடக்கிய சீன போலீஸ் - தொடர்ந்து பதட்டம்

சென்னை: சீனாவின் ஜின்சியாங் மாகாணத் தலைநகர் உரும்கியில் உய்கூர் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை மிகவும் கொடூரமாக நசுக்கி, அடக்கியுள்ளது சீன போலீஸ். தங்களது மக்கள் மீது வாகனங்களை ஏற்றியும், தாறுமாறாக துப்பாகிகளால் சுட்டும், அடித்தும் கொன்றதாக உய்கூர் மக்கள் கூறியுள்ளனர்.
சீன போலீஸார் கூறுவது போல 140 பேர் இறக்கவில்லை. மாறாக 600க்கும் மேற்பட்டோர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளதாக உய்கூர் இன மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வட மேற்கு சீனாவில் உள்ள உய்கூர் மக்கள் முஸ்லீம்கள் ஆவர். இவர்களுக்கும் சீனர்களின் ஹான் பிரிவினருக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் இணையதளம் ஒன்றில் உய்கூர் மக்கள் 2 ஹான் சீனப் பெண்களைக் கற்பழித்து விட்டதாக செய்தி வெளியானது. இதனால் ஹான் மக்கள் கொந்தளித்தனர்.
இதையடுத்து குவாங்டாங் என்ற நகரில் உள்ள பொம்மைத் தொழிற்சாலைக்குள் புகுந்த ஹான் சீனத் தொழிலாளர்கள் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த உய்கூர் தொழிலாளர்களைத் தாக்கினர். இதில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்குப் பின்னர்தான் கற்பழிப்பு செய்தி பொய்யானது என்பதை போலீஸார் கண்டுபிடித்து அறிவித்தனர்.
இதையடுத்து சீனக் கொடியுடன் உய்கூர் மக்கள் கொல்லப்பட்ட தொழிலாளர்களின் மரணத்திற்கு நியாயம் கோரி அமைதியான முறையில் போராட்டத்தைத் தொடங்கினர்.
இந்தப் போராட்டம் மத ரீதியில் நடத்தப்பட்டதாக போலீஸார் கூறுகின்றனர். ஆனால் தாங்கள் முஸ்லீம்கள் என்ற அடிப்படையில் போராட்டம் நடத்தவில்லை. முஸ்லீம் கொடிகளை நாங்கள் கையில் ஏந்தியிருக்கவில்லை. எங்களுக்கும் துர்கிஸ்தான் இஸ்லாமிய அமைப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார் உய்கூர் இனத்தவர்.
அமைதியாக நடந்த போராட்டத்தை ஆயுத பலத்தைக் கொண்டு அடக்க முயற்சித்தது சீன போலீஸ். இதையடுத்து கலவரம் வெடித்தது. சாலையில் சென்று கொண்டிருந்த ஹான் சீனர்களை குறி வைத்து தாக்கத் தொடங்கினர் உய்கூர் மக்கள்.
ஹான் இனத்தவரின் கடைகள், வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன.
கலவரம் பெரிதாவதைப் பார்த்த சீன போலீஸார் தடியடி, கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு என இறங்கி விட்டனர்.
இந்த தாக்குதலில் 140 பேர் இறந்ததாக சீன போலீஸார் தெரிவிக்கின்றனர். கலவரத்தில் 261 வாகனங்கள் தாக்கி அழிக்கப்பட்டன. இவற்றில் 190 பேருந்துகள், 10 டாச்சிகள், 2 போலீஸ் கார்கள் அடக்கம்.
203 கடைகள், 14 வீடுகளும் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.
பல நூறு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் 90 முக்கிய நபர்களை தேடி வருகின்றனராம்.
ஆனால் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக உய்கூர் இனத்தவர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து உலக உய்கூர் காங்கிரஸ் அமைப்பு மூனிச் நகரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீன அதிகாரிகள்தான் வன்முறையைத் தூண்டி விட்டு எங்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
அமைதியான முறையில் கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டம் நடத்தியமக்கள் மீது சாதாரண போலீஸார், கலவரத் தடுப்புப் போலீஸார், சிறப்புப் போலீஸார், ஆயுதப் போலீஸார் என பல வகை போலீஸார் சேர்ந்து மிருகத்தனமான தாக்குதலைத் தொடுத்தனர்.
கவச வாகனங்கள், தானியங்கித் துப்பாகிகள் கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு என சகலவிதமான ஆயுதங்களையும் பயன்படுத்தினர்.
போராட்டத்தி்ல ஈடுபட்ட பலர் துப்பாக்கி குண்டு பட்டு இறந்தனர். சிலர் போலீஸார் அடித்ததால் உயிரிழந்தனர். பலர் மீது வாகனங்களை ஏற்றிக் கொன்றுள்ளனர். ஜின்சியாங் பல்கலைக்கழகம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
சீன போலீஸார் 140 பேரை இறந்ததாக கூறுகின்றனர். ஆனால் 600 பேர் வரை இறந்துள்ளனர்.
தற்போது கலவரம் தடுக்கப்பட்டு விட்ட போதிலும் கூட உரும்கி நகரம் தொடர்ந்து பதட்டத்துடன்தான் காணப்படுகிறது.
thatstamil