13/6/09

ஷார்ஜாவில் சிறப்பாக நடைப்பெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஓட்டுரிமை பற்றிய கருத்தரங்கு

எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரடேனிடி ஃபாரம் (Emirates India Fraternity Forum) நேற்று வெள்ளிக்கிழமை 12.06.2009 அன்று ஷார்ஜாவிலுள்ள இந்தியன் அசோசியேசன் ஹாலில் NRI க்களுக்கு ஓட்டுரிமை வழங்குவது பற்றிய கருத்தரங்கை சிறப்பாக நடத்தியது.

நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்ட இக்கருத்தரங்கு சரியாக இரவு7.50க்கு துவங்கியது. EIFF-ன் சகோதரர் அப்துல் கனி அவர்கள் EIFF அமைப்பை அறிமுகப்படுத்தி அதன் பல்வேறு பணிகளை விவரித்துக்கூறினார். நிகழ்ச்சியை அழகுற தொகுத்து வழங்கியதும் அவரே.ஏன் NRI களுக்கு ஓட்டுரிமை வழங்கப்படவேண்டும் என்பது குறித்து பல புள்ளிவிவரங்களை அழகுற எடுத்துக் கூறி அடுத்து உரையாற்றினார் EIFF இன் பேச்சாளர் செய்யத் அலீ. NRI கள் இங்கே பல அல்லல்களுக்கும் ஆட்பட்டு வருகின்றனர். அவர் தம் துயர் துடைக்கப்படவேண்டுமெனில் அவர்களுக்கு ஓட்டுரிமை வேண்டும். அப்பொழுதே Bargaining Power என்கிற நமது உரிமைகளைக் கோரும் அதிகாரம் நமக்குக் கிடைக்கும் என்று தனது உரையில் கூறிய அவர் இது குறித்து தெளிவாகப் புரியும்படி இன்னும் பல கருத்துகளைக் கூறினார்.

அடுத்து உரையாற்றிய EIFF-ன் சகோதரர் ரஷீத் மாஸ்டர் அவர்கள் வெள்ளிக்கிழமை 12.06.2009 அன்று நடைபெற்ற ஈரான் பாராளு மன்ற தேர்தலில் யு.ஏ.இ இல் வசிக்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஈரான் குடிமக்களுக்கு அந்நாடு தமது தூதரகங்களில் வாக்குரிமையை பதிவுச்செய்ய வாய்ப்பு ஏற்படுத்துக்கொடுத்ததை குறிப்பிட்டார். ஆனால் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் வெளிநாடுகளில் வாழும் 3 கோடி இந்தியர்களுக்கு வாக்குரிமையை மறுப்பதை ஆதங்கத்தோடு குறிப்பிட்டார். பஹ்ரைனைச்சார்ந்த ஷிஹாஸ் பாபு என்பவர் கடந்த மாதம் கேரள உயர்நீதிமன்றத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமையை மறுப்பதை எதிர்த்து வழக்கு தொடுத்துள்ளதை பாராட்டிய அவர் ஷிஹாஸ் பாபு தொடுத்த வழக்கில் மனுதாரராக இணைய Emirates India Fraternity Forum திட்டமிட்டுள்ளது என்பதையும் தெரிவித்தார்.

அதன் பின்னர் கலந்துகொண்டோரின் கருத்துகள் கேட்கப்பட்டன. ஆர்வமுடன் பலர் மேடைக்கு வந்து தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.அடுத்ததாக சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றிய துபாய் கார்ப்ரேட் பாங்கிங் துணைத்தலைவர் சகோதரர் ஜாஃபர் அலீ, ஏராளமான நாடுகள் வெளிநாடுகளில் வாழும் தங்களது குடிமக்களுக்கு வாக்குரிமையை வழங்கியுள்ளதை தனது உரையில் குறிப்பிட்டார். அவர் இந்திய அரசு நினைத்தால் இந்த உரிமையை தனது குடிமக்களுக்கு வழங்கமுடியும் என்பதற்கு உதாரணமாக ராணுவத்தில் பணியாற்றும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களுக்கு (Proxy) பகர ஆள் மூலம் வாக்குரிமை பதிவுச்செய்யும் சட்ட மசோதாவை இயற்றியுள்ளதையும் குறிப்பிட்டார்.மேலும் அவர் தமது உரையில் EIFF நடத்திய இந்த கருத்தரங்கில் கலந்துக்கொண்ட பொதுமக்களுக்கும் தங்களது கருத்துக்களை கூற வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததை வேறு எந்த நிகழ்ச்சியிலும் நடைபெறாத ஒன்று என்று பாராட்டினார்.

இறுதியாக EIFF-ன் சகோதரர் பொறியாளர் முஹம்மது இஸ்மாயீல் அவர்கள் நிறைவுரை ஆற்றினார். EIFF இந்தப் பிரசாரப் பணியை மூன்று கட்டங்களாக நடத்தவிருக்கிறது. முதல் கட்டமாக பிரசாரக் கூட்டங்களை வளைகுடா நாடுகளில் நடத்தி வருகிறது. இரண்டாம் கட்டமாக புதிய அரசு அமைந்தவுடன் அதன் கவனத்தை ஈர்க்கும் விதமாக மும்பை, சென்னை, கொல்கத்தா, கோழிக்கோடு போன்ற நகரங்களில் இது குறித்து மாநாடுகளை நடத்தவிருக்கிறது. அரசு செவி சாய்க்கவில்லை எனில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தவிருக்கிறது. அதற்கும் அரசு செவி சாய்க்கவில்லை எனில் மூன்றாம் கட்டமாக சட்ட ரீதியான முயற்சிகளில் EIFF இறங்கும். உச்ச, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களைக் கொண்ட ஒரு சட்டக் குழுவை உருவாக்கி அதன் மூலமாக இறுதி வரை EIFF போராடும் என்று அவர் EIFF இன் போராட்ட வழிமுறைகளை விளக்கமாக குறிப்பிட்டார்.

சகோதரர் ஆஷிக் அவர்கள் நன்றியுரை நவில நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. கலந்துகொண்டோர் நிகழ்ச்சி குறித்த தங்கள் கருத்துகளை கொடுக்கப்பட்ட Feedback Form இல் பதிவு செய்தனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே!

தொடர்புடைய செய்திகள்: துபாய் , அபுதாபி , மனு